கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

புதன், 12 அக்டோபர், 2011

போதி தர்மர் [போ-ட்டி-தாமா]



காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ மன்னனான கந்தவர்மன்க்கு மூன்றாவதாகப் பிறந்த குழந்தைதான் போதிதர்மர். இவரின் இயற்பெயர் புத்த வர்மன்(பௌத்தவர்மப் பல்லவன்). கந்தவர்மன்னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்:

1. நந்திவர்மன் I
2. குமாரவிஷ்ணு II
3. புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)

அக்காலத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்த கடைசிக் குழந்தையை புத்த மதத்திற்கு அர்ப்பணிப்பது மரபு. எனவே பல்லவ மன்னன் கந்தவர்மன் 3 மகனின் குருகுல வாழ்க்கைக்காக பிரஜ் என்கிற சமய குருவிடம் சேர்த்திருக்கிறார் . இவர் காஞ்சியில் தங்கி பௌத்த சிந்தனைகளைப் பரப்பி வந்தவர். சிறுவன் போதியின் அபார ஞானத்தைப் பார்த்து பிரமித்த பிரஜ், தனக்கு அடுத்த வாரிசாக 28வது குருவாக போதியை நியமிக்கிறார். காலப்போக்கில் போதி தர்மர் காஞ்சிபுரத்திலிருந்தபடியே பல கலைகளைக் கற்றுத் தேர்கிறார். இதில் களறி, வர்மம் போன்ற அதிரடிக் கலைகளும் உண்டு. காஞ்சியிலிருந்து நாலந்தா சென்று அங்கிருந்து கி.பி.526-ல் தெற்கு சீனாவிற்குச் செல்கிறார் போதி தர்மர்.போதிதர்மாவின் காலம் கி.பி.475-550 என்று பதிவுகள் கூறுகின்றன.

அன்றைய சீனப் பேரரசராக இருந்தவர் "லியாங் வு டீ".புத்த மதத்தில் கொண்ட ஈடுபாட்டால் பௌத்த ஆலயங்களையும் விகாரங்களையும் நிறுவிய சீனப் பேரரசர். தமிழகத்திலிருந்து வந்த புத்தத் துறவியான போதி தர்மரை கேள்விப்பட்டு மிகுந்த மரியாதையோடும், அன்போடும் உபசரித்து சீனாவில் தங்கிவிட வேண்டுகிறார். அங்கு ஷாஓலின் என்ற இடத்தில் தங்கி பௌத்த மதத்தைப் பரப்பிய போதி தர்மர், தமிழகத்தில் தான் கற்ற கலைகளையும் சீனர்களுக்குப் பயிற்றுவித்தார். அப்படி போதிதர்மர் கற்றுக் கொடுத்த கலைகளில் ஒன்றுதான் குங்ஃபூ.



போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிக்குகள் பிச்சை எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டு பயந்தே வாழ்ந்திருந்தார்கள். ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின் சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின் செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின்மூலம் உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த முடியும். உடற்பயிற்சிகளையும் சொல்லிக்கொடுத்தார். அத்துடன் அரிய நுட்பக்கலையான வர்ம சாஸ்திரத்தையும் சொல்லிக்கொடுத்தார்.

அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச் செய்யச் சொல்லிக் கொடுத்தார். தங்களது கோயில்களைச் சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே விளைவித்துக்கொண்டார்கள். சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை. உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில தற்காப்பு முறைகளையும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில் காயம் ஏற்படா முறைகளையும் கற்றுக்கொடுத்தார். பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின் பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது போதிதர்மரின் சீடபரம்பரையும் கோயில்களும் மட்டும் தப்பின.


அவ்வாறு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தக்கோயில்களை ஷாஓலின்(Shaolin) கோயில்கள் என்பார்கள்.






போதி தர்மர் வாழ்ந்த இடத்தை சீனாவில் "ஷாஓலின் கோயில்" என்று இன்றைக்கும் வணங்கி வருகிறார்கள். அந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டில் ‘தென் இந்தியாவிலிருந்து வந்த போதி தர்மர் கற்றுத் தந்த கலை குங்ஃபூ’ என்று குறிக்கப்பட்டுள்ளது. அவரை சீன மக்கள் "போ-ட்டி-தாமா" என்றுதான் செல்லமாக அழைக்கின்றனர்.