கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

வியாழன், 5 டிசம்பர், 2013

ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி ஓம் அகதீஸ்வராய விதமஹே பொதிகை சஞ்சராய தீமஹி தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்





அகத்தியம் அகத்தியம், மிகப் பழைமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருத்தப்படுகின்றது. அகத்தியர் என்பவர் இயற்றிய நூலாதலால் இது அகத்தியம் என்று வழங்கப்படுகின்றது. முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச்சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இது, பிற்கால இலக்கண நூல்களைப்போல், இயற்றமிழுக்கு மட்டுமன்றி, இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது. தற்காலத்தில் அகத்தியத்தின் சில பகுதிகள் மட்டுமே பல்வேறு நூல்களில் இருந்து கிடைத்துள்ளன.இப்பொழுது நமக்குக் கிடைக்கும் மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்துக்கு மூலநூலும் இதுவே ஆகும்.
அகத்தியரின் மாணவர்கள்.
1. செம்பூண்சேய்
2. வையாபிகன்
3. அதங்கோட்டாசான்
4. அபிநயனன்
5. காக்கை பாடினி
6. தொல்காப்பியர்
7. வையாபிகன்
8. பனம்பாரனார்
9. கழாகரம்பர்
10. நத்தத்தன்
11. வாமனன்
12. துராலிங்கன்

அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன. முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர். அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார். கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை. இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர். சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார். அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார். தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் நூலை இயற்றினார். அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான். சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார். புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர். சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம். அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார். மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:
தமிழுலகில் நன்கு அறிமுகமான பெயர் அகத்தியர் என்பது. இவர் பற்றித் தமிழிலும் வடமொழியிலும் வழங்கும் புராணக் கதைகள் பல. இவர் பேராற்றல் கொண்ட முனிவராகவும், இலக்கியம், இலக்கணம், இசை, கூத்து, மருத்துவம், சோதிடம் உளவியல் முதலான பல்கலை வல்லுநராகவும் கருதப்படுகின்றார். இவர் பெயரால் பல மருத்துவ நூல்களும், சோதிட சாத்திரங்களும் வழங்குகின்றன. இவர் முத்தமிழுக்கும் இலக்கணமாக இயற்றியது அகத்தியம் என்பர். இதனைப் பேரகத்தியம் என்றும் கூறுவர். இதில் 12000 சூத்திரங்கள் இருந்தன என்பர்.
தமிழ் தந்த முனிவர் இவர் தமிழுக்குச் செய்த பெருந்தொண்டினைப் பாராட்டும் வகையில்,
கம்பர் பெருமான், ‘தமிழ் என்னும் அளப்பரும் சலதி (கடல்) தந்தவன்’
‘தழல்புரை சுடர்க்கடவுள் (சிவன்) தந்த தமிழ் தந்தான்’ என்று பாராட்டினார்.
யாப்பருங்கலக் காரிகை, ‘தேனார் கமழ் தொங்கல் மீனவன் கேட்பத் தெண்ணீர் அருவிக் கானார் மலையத்து அருந்தவன் சொன்ன கன்னித்தமிழ்’ என்று புகழ்கிறது.
வீரசோழிய ஆசிரியர், ‘அகத்தியன் புவனிக்கு இயம்பிய தண்டமிழ்’ என்று புகழ்ந்தார்.
அகத்தியரின் வருகை அகத்தியர் சிவபெருமான் கட்டளைப்படி தமிழகம் வந்து பொதிகை மலையில் தங்கினார் என்று கந்தபுராணம் கூறுகிறது. அகத்தியர் கடல் கொண்ட குமரி நாட்டில் தோன்றியவர் என்பது ஓர் பழஞ்செய்தி. சிவபெருமான் பார்வதியை மணந்த நாளில் தேவரெல்லாம் ஒன்று கூடியமையால் வடமலை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது என்றும், நாவலந்தீவினைச் சமன் செய்வதன் பொருட்டே அகத்தியரைச் சிவபெருமான் இங்கு அனுப்பினார் என்றும் கந்தபுராணம் கூறுகிறது. அகத்தியர் பற்றிய கதைகள் அகத்தியர்க்குத் தமிழ் அறிவுறுத்தியவர் சிவன் என்றும் முருகன் என்றும் கதைகள் உண்டு. இவர் மகேந்திர மலையில் தங்கி ஆகமம் கேட்டார் என்றும் கூறுவர். இவர் பற்றி வழங்கும் கதைகள் மிகப்பல. இவர் விந்திய மலையின் ஆணவத்தை அடக்கினார்; வில்வலன், வாதாபி என்னும் அரக்கர்களை அழித்தார்; விதர்ப்ப மன்னன் மகள் உலோபா முத்திரையை மணந்து சித்தன் என்னும் மகனைப் பெற்றார்; இவர் கமண்டலத்து நீரே காவிரி ஆயிற்று. இப்படிப் பல கதைகள் உள்ளன. சங்கப்புலவர் இவர் முதற் சங்கத்திலும் இடைச் சங்கத்திலும் வீற்றிருந்தவர் என்றும், அவ்விரு சங்கத்திற்கும் அகத்தியமே இலக்கணம் என்றும் கூறுவர். இவர் பொதிகையில் தமிழ் வளர்த்தமை பற்றி வால்மீகியும் கம்பரும் பாராட்டுகின்றனர்.
அகத்தியச் சூத்திரங்கள் அகத்தியச் சூத்திரங்கள் என உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப் பட்டன பல உள்ளன. ஆனால், அவற்றின் நடையும், பொருளும் ஐயத்திற்கு இடமானவையாகும். இவை பிற்காலத்தவரால் இயற்றப்பட்டன என்பதில் ஐயம் இல்லை. எடுத்துக்காட்டாகக் கீழ்வரும் சூத்திரங்களைக் காணுங்கள். ஆலும் ஆனும் ஓடும் ஒடுவும் சாலும் மூன்றாம் வேற்றுமைக்கு.... அகத்தியரின் மாணாக்கராகக் கருதப்படும் தொல்காப்பியர் ஒடு உருபை மட்டுமே மூன்றாவதன் உருபாகக் கூறினார். ஓடு என்ற வடிவத்தையோ ஆல் உருபையோ அவர் சொல்லவில்லை. சங்க இலக்கியத்தில் ஆல் உருபு இல்லை. இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே எள் இன்றாகில் எண்ணெயும் இன்றே எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல இலக்கியத்தினின்றும் எடுபடும் இலக்கணம் இதில் உள்ள இலக்கியம் என்பது பிற்காலச் சொல்.எள் என்ற வடிவம் சங்க இலக்கியத்திலும், தொல்காப்பியத்திலும் இல்லை. மாறாக எண் என்றே உள்ளது. இச்சான்றுகள் அகத்தியர் பெயரால் வழங்கும் சூத்திரங்கள் பிற்காலத்தவரால் இயற்றப்பட்டன என்பதனைக் காட்டும்.



அதங்கோட்டாசான் - முக்கடலும் முத்தமிழும் மூவேந்தர் பரம்பரையும் கோட்டையிலே வில்,புலி,மீன் கொடிகள் நாட்டி செந்தமிழ் தாய் சீரிமை திறம் விளங்க சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியனும் அவன் அமைத்த தமிழ் சங்கத்திலே எழுத்தாணி ஏந்தி தலைமைப்புலவனாய் தமிழாய்ந்த புலவர்களில் ஒருவர் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் ஆவார். தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்கள் வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க இடம்தான் அதங்கோடு. இவ்விடம் குமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு பின்னர் விளவங்கோடு என மருவிய விளவங்கோடு தாலுக்காவில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளது. அதன்கோட்டில் சூரியமுக்கு என்னும் இடமுண்டு. இவ்விடத்தின் அருகில் "பக்றுளி ஆறு" என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட குழித்துறை தாமிரபரணி ஆறு செல்கிறது. தொன்றுதொட்டே அதங்கோடு ஒரு ஆற்றங்கரை நாகரீகப் பகுதியாக இருந்து வந்துள்ளது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். அதங்கோடு சூரியமுக்கில் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்களால் நடத்தப்பட்டு வந்த தமிழ் சங்கம் தண்ணீர் பெருக்கால் அழிக்கப்பட்ட காரணத்தினால் அவரும் அவரோடு சார்ந்த தமிழ்ப்புலவர்களும் பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த 'கபாடபுரத்தில்' நடந்த தமிழ் சங்கத்தில் இணைந்தார்கள்.கபாடபுர தமிழ்ச்சங்கத்தை கும்பவம்பக்குறுமுனி என்று அழைக்கப்பட்ட "அகத்தியர்" தலைமைதாங்கி நடத்தி வந்தார்.அவருடன் கீழ்க்கண்ட பன்னிரு பெரும் சீடர்களாயினர். தொல்காப்பியர் அதங்கோட்டாசான் துராளிங்கன் செம்புத்செய் வையாபிகன் வாய்ப்பியன் பணம்பாரன் கலாரம்பன் அவினயன் காக்கை பாடினியன் நட்டதன் வாமணன் இவர்களை அகத்தியரின் "பன்னிருமாணாக்கர்" என அழைக்கிறோம்.'கபாடபுரத்தில் ',"அகத்தியர்" தலைமையில் நடந்து வந்த தமிழ் சங்கத்திற்கு,முதல் தமிழ் இலக்கண நூலக இருந்தது "அகத்தியம்" என்னும் இலக்கண நூல் ஆகும்."அகத்தியம்" கால வெள்ளத்தால் அழிந்த காரணத்தால் அதற்கு வழி நூலக ஒரு இலக்கண நூலை இயற்ற தனது தலை மாணாக்கரான தொல்காப்பியரை அழைத்துச்சொன்னார் அகத்தியர்.
இந்நிலையில் தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இயற்றினார்.மதுரை தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப்பட்டது என்பது வரலாறு.தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில் எழுத்து,சொல்,பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களிலும் எக்குற்றமும் இல்லை என அறுதி இட்டு கூறினார் அதங்கோட்டாசான்.
பணம்பாரரின் கருத்து தொல்கபியப் பாயிரத்திற்கு உரை எழுதிய பணம்பாரன் என்னும் தமிழ்ப் புலவர் தனது சிறப்புப் பாயிரத்தில்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அரங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதன்கோட்டாசாற்கு அகில் தபத்தெரிந்து
இதன் விளக்கம் யாதெனில் மாற்றானது நிலத்தை தன் கீழ் வாழ்வார்க்கு கொண்டு கொடுக்கும் மன்னன் மாகீர்த்தியது அவையின் கண் நான்கு மறைகளையும் அதாவது ரிக், யஜூர் , சாம,அதர்வண எனும் நான்கு வேதங்களையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என விரிவாக எழுதிஉள்ளார்.
இளம்பூரணரின் கருத்துதொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரைப்பாயிரம் எழுதிய இளம்பூரணம் என்னும் தமிழ்ப்புலவர் நான்கு மறைகளையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்று எழுதிஉள்ளார். அடைமொழி இன்றி தனிமொழியாக "அதங்கோடு" என்கிற ஊர் திகழ்கிறது.அதனால் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்தை அரங்கேற்றியவர் அதன்கோட்டில் பிறந்து தமிழ் ஆய்ந்த இடம் "அதங்கோடு" என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொ.கோவிந்தநாதன் கருத்துபுலவர் கொ.கோவிந்தநாதன் அவர்கள் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அதன்கோட்டை சார்ந்தவர் என்பதை தனது இளமை பருவம் முதல் அதாவது 1972-இம் ஆண்டு முதல் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்து தமிழ் கூறு நல்லுலக வாழ் தமிழ் மக்கள் அனைவரும் அறியும் வண்ணம் செய்து வருகிறார்.
அதங்கோட்டாசான் தமிழ் மன்றம் தமிழறிஞர் அதங்கோட்டாசானை நினைவு கூரும் வகையில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தமிழ் மன்றம் அவர் பெயரில் சீரிய முறையில் இயங்கி வருகிறது.

தொல்காப்பியர் தொன்மைக்(முந்தைய) காலத்தில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. அக்கூட்டுக்குடும்பத்தினைச் சுருக்கமாக குடி என்பர். 'குடி உயர கோல் உயரும்' என்பது பழமொழி ஆகும். ஒவ்வொரு குடிக்கும், ஒரு பெயருண்டு. அங்ஙனம் இருந்த காப்பியக்குடியில் வாழ்ந்தத காப்பியருள், இந்நூல் ஆசிரியனும் ஒருவன். எனவே, தொல்காப்பியன் எனப்பட்டான். இன்று மரியாதைக் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப் படுகிறார்.தொல்காப்பியத்தினை எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர் காலத்திலும் (கி. மு. 200) முற்பட்டவர் என திரு. கே. எஸ். சீனிவாசப்பிள்ளை தனது நூலான தமிழ் வரலாறு நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியர் எழுதிய 'தொல்காப்பியம்' வியாச முனிவர் வேதத்தைப் பகுத்ததற்கு முன் எழுந்தது' என டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார். தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர் என Tamil Studies என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். சீனிவாச ஜயங்கார் தனது கருத்தை விளக்குகின்றார். வேதகாலமாகிய கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என மறைமலை அடிகளார் குறிப்பிடுகின்றார். "தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஜந்நூறு ஆண்டுகளுக்குப்பிற்பட்டவராதல் இயலாது" என வித்வான் க. வெள்ளைவாரணன் தன் 'தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' என்ற நூலின் 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியர் காலம் பற்றியும், திருக்குறள், சங்கப்பாடல்கள் பற்றியும், இரட்டைக் காப்பியங்கள் பற்றியும் கால ஆராய்ச்சி என்பது ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே இருந்து வந்துள்ளது. இப் பழந்தமிழ் நூல்கள் பற்றிய ஆய்வு, தமிழ் மொழியுடன் தொடர்புடையது. தமிழ் மொழி ஆய்வு, சிந்துவெளி நாகரிக ஆய்வுடனும் தெற்கிலிருந்து மறைந்த குமரிக் கண்ட ஆய்வுடனும் தொடர்புகொண்டது. இன்றைய அகழாய்வுகளும், கல்வெட்டு ஆய்வுகளும் மேற்சுட்டிய பழந்தமிழ் நூல்கள் கிறித்தவ ஊழிக்கு முற்பட்டனவே என நிறுவுமாறு சான்றுகள் மிகப்பல கிடைத்து வருகின்றன. இதனால், இம் முடிவில் தொடர் ஆய்விலேயே இருந்த பேரறிஞர்களாகிய ஐராவதம் மகாதேவன், தினமலர் கிருஷ்ணமூர்த்தி, ஆர். நாகசாமி போன்றவர்களும் தமிழ் மொழியியல் மரபுவழி அறிஞர்களும் இன்று கிறித்தவ ஊழிக்கு முற்பட்ட காலம் என்பதை ஏற்கின்றனர். இந்நிலையில், தொல்காப்பியர் காலம் கிறித்துவுக்குப் பிற்பட்டது என்பார் கூற்று, சான்றற்றது என விட்டுவிடத்தக்கதாகிறது. கிறித்துவுக்கு முற்பட்டது என்ற முடிவிலும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
க.வெள்ளை வாரணர் கி.மு. 5320
மறைமலையடிகள் கி.மு. 3500
கா.சுப்பிரமணிய பிள்ளை கி.மு. 2000
ச.சோ.பாரதியார் கி.மு. 1000
க.நெடுஞ்செழியன் கி.மு. 1400
மா.கந்தசாமி கி.மு.1400
கே.கே.பிள்ளை கி.மு. 400
மு.வரதராசனார் கி.மு. 500
ஞா.தேவநேயப் பாவாணர் கி.மு.700
சி.இலக்குவனார் கி.மு.700
இரா.இளங்குமரன் கி.மு.700
தொல்காப்பியர் காலத்தின் ஆய்வில் கீழ் எல்லையாக கி.மு.7-ஆம் நூற்றாண்டைக் கொள்ளுதல் தகும். தொல்காப்பியம் என்ற இலக்கிய வரலாற்று "உரைநடைத் தொல்காப்பிய' நூலில் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), க.வெள்ளை வாரணர், தொல்காப்பியம் திருக்குறளுக்கு முற்பட்டது. சங்கப் பாடல்களுக்கு முற்பட்டது என்பதைப் பல சான்றுகளால் நிறுவியுள்ளார். சி.இலக்குவனார், தொல்காப்பியம் திருக்குறளுக்கும் சங்கப் பாடல்களுக்கும் முற்பட்டது என்பதற்குப் பல சான்றுகள் தந்துள்ளார். இவையும் இவை போன்ற செய்திகள் எளிதில் மறுக்கக்கூடியதே. பாணர், பொருநர் போன்றவர்களின் ஆற்றுப்படைப் பாடல்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ஆனால், அவர்களின் பாடலுக்கு இலக்கிய வடிவம் தந்து, புலவர்கள் அவர்கள் பாடலைப்போல பாடியவையே பத்துப்பாட்டில் உள்ளன. தொல்காப்பியர் செய்யுள் வடிவமான பாவகைகளைக் கூறும் விளக்கம் அனைத்தும், அவர் தமக்கு முந்தியவற்றைக் கண்டு கூற முற்படுவதை உணர்த்துகின்றன. பிற்கால யாப்பிலக்கண நூல்களைப்போல வரையறைப்படுத்திக் கூறவில்லை. இலக்கணம் கூறும் முறை தொடக்க காலத்தைக் காட்டுகிறது. இதனால் முதற்கண் சங்கப் பாடல்களின் காலத்தை ஒரு முடிவு செய்துகொள்வது பொருத்தமாக இருக்கும். சங்க இலக்கியப் பாடல்கள் பாடப்பட்ட காலம் கி.மு. 5, 4-ஆம் நூற்றாண்டுகள் என்பதை, நடுநிலையாளர் அனைவரும் ஒப்புவர் என்பது இயற்கையே.
தொல்காப்பியர் காலம்: சங்கப் பாடல்களின் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என்பதை அதன் மேல் எல்லையாகக் கருதலாம். தொல்காப்பியம் அச் சங்கப் பாடல்களுக்கு சில நூற்றாண்டுகள் முற்பட்டிருக்க வேண்டும் என்பதும் முன்பே குறிக்கப்பட்டது. இங்கு காட்டப்பட்டுள்ள சான்றுகளின் படியும் சான்றோர் பலரது ஆய்வுகளின் படியும் உற்று நோக்கினால், தொல்காப்பியர் காலம் கி.மு.7-ஆம் நூற்றாண்டுக்கும் 8-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது எனல் பொருந்துவதாகும். அதனால் கி.மு. 31, திருவள்ளுவர் காலம் என முடிவு செய்யப்பட்டதுபோல கி.மு. 711 தொல்காப்பியர் காலம் என முடிவு செய்யலாம். தொல்காப்பியர் காலம் பற்றிப் பல்வேறு கருத்துகள் உள்ளன. எனினும் திருவள்ளுவர் காலம் பற்றி ஒரு முடிவு செய்ததும் திருவள்ளுவர் திருவுருவம் பற்றிய கருத்துப் போலவும் தொல்காப்பியர் திருவுருவம் பற்றி (கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் போன்ற வடிவம்) ஒரு கருத்துடன் முடிவுசெய்தலும் திருவள்ளுவர் நாள் போல, தொல்காப்பியர் நாள் ஒன்றைக் குறிப்பது அச்சான்றோரை-தமிழ்ப் புலவோரில் முதற்குடி மகனெனப் போற்றத் தகுந்த பெருமையுடையவரை ஆண்டுதோறும் நினைந்து கொண்டாட வாய்ப்பாகும்.
தொல்காப்பியர் நாள்: தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார், நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்தில், நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் முன்னிலையில், தொல்காப்பியர் தம் நூலை அரங்கேற்றினார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து, அரச அவையத்தில் (சங்கத்தில்) புதிய நூல்கள் அரங்கேற்றப்பட்ட மரபு மிகத் தொன்மைமிக்க காலத்திலிருந்து வழக்கிலிருந்தமை அறியப்படுகிறது. பாண்டிய நாட்டு மதுரையில் இம்மரபு தொடர்ந்து நடந்ததைக் கலித்தொகையால் அறிகிறோம். கலித்தொகையில், பாலைக்கலியில், பாலை பாடிய பெருங்கடுங்கோ இதைக் குறிப்பிடுகிறார். தலைவன் பிரிந்து சென்ற போது திரும்பி வருவதாகக் கூறிச் சென்றது இளவேனிற் காலமாகும். ஆனால், தலைவன் இளவேனிற் பருவம் வந்தும், கூறியபடி வந்திலன்; சிறிது காலம் தாழ்த்தது. "அப்பருவம் வந்ததும், தலைவரும் வருகிறார் பார் வருந்தாதே' எனத் தோழி கூறுவதாக இப்பாடல் உளது. தரவு என்ற முதற்பகுதியில் இளவேனில் வருணனை, பிறகு மூன்று தாழிசைகளில் இவ் இளவேனிற் பருவமல்லவா அவர் வருவதாகச் சொன்னது; அவரும் மறவாது வந்தனர் எனக் கூறும் ஆறுதலுரை எனப் பாட்டுப் பொருளமைப்பு உள்ளது. இதில் வரும் மூன்று தாழிசைகளும் கால (சித்திரை, வைகாசி) வருணனைகளாக உள்ளன. முதல் தாழிசை, வையையாறு பூத்துக்குலுங்கும் காலம்; இரண்டாம் தாழிசை, காதலர் காமன் விழாக் கொண்டாடும் காலம்; மூன்றாம் தாழிசை, புலவர்கள் புதிய நூல்களை அரங்கேற்றும் காலம். இங்கு மூன்றாம் தாழிசைதான் உற்று நோக்கத்தக்கது.
""நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார்
புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுதன்றோ?
பலநாடு நெஞ்சினேம் பரிந்துநாம் விடுத்தக்கால்
கடரிழாய் நமக்கவர் வருதுமென்று உரைத்ததை
(கலி:35)
நிலன் நாவில் திரிதரூஉம் - உலகோர் நாவிலெல்லாம் பலவாறு புகழ்பாடும், நீண்ட மாட மாளிகைகளையுடைய இக் கூடல் மாநகரிலுள்ளார் புலவர்களின் நாவில் பிறந்த புதிய சொற்களை - நூல்களைக் கேட்டு இன்பம் நுகர்ந்து மகிழும் இளவேனிற் காலமல்லவா? புலன் நாவில் பிறந்த புதிய சொல் - புதிய புதிய நூல்களைப் புலவர்கள் புதிதாக இயற்றி வந்து, அவர்களே அவற்றை எடுத்துக் கூறி அரங்கேற்றுதல், புதிதுண்ணல் - அரசனும் மக்களும் அப்புதிய பனுவல்களைக் கேட்டு, நுகர்ந்து இன்புறுதல், இவ்வாறு அரங்கேற்றம் இளவேனிலில் நடந்ததென்றால், இது நீண்ட நாள் மரபாக இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியர், பாண்டியன் அவையில் அரங்கேற்றிய நாளும் இதுவாகவே இருக்கும் எனக் கொள்ளலாம்.
எனவே, கி.மு. 711, சித்திரை மாதம், முழுமதிநாள் (சித்ரா பெüர்ணமி) தொல்காப்பியர் தம் ஒல்காப் பெரும் புகழ் தொல்காப்பியத்தை அரங்கேற்றிய நாளாக மட்டுமன்றி, அவரது பிறந்த நாளாகவும் கொண்டு, கொண்டாடுதல் பொருத்தமுடையதாகும்.